திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.10 திருவண்ணாமலை
பண் - நட்டபாடை
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
2
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
சூலிம்மணி தலைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
3
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
4
மலவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
5
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறநோயடை யாவே.
6
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
7
ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
8
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறவல்உமை தலைவன்னடி சரணே.
9
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.
10
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.69 திருவண்ணாமலை
பண் - தக்கேசி
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.
2
ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
3
இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
4
உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.
5
எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.
6
வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
7
மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெறியவூன்றி நிறையஅருள்செய்தார்
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.
8
தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
9
தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.
10
அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com